இந்த வலைப்பதிவில் தேடு

உறவுகள்

ஒரு குறிக்கோளின்றி உட்கார்ந்து கொண்டு தொடுவானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். மனம் அதன் வசத்தில் அலைந்துகொண்டிருந்தது. அதன் ஓட்டத்தை வெறுமே கவனித்துக் கொண்டிருந்தேன். அது உறவுகளைப் பற்றி ஆராய ஆரம்பித்தது. முதல் கேள்வி தோன்றியது. இங்கே என் உறவுகள் யார், யார்? யோசித்தேன். யாருமில்லை என்றே தோன்றியது. இதுநாள் வரை யாரெல்லாம் என் உறவு என்று எண்ணியிருந்தேனோ அவர்கள் யாரும் எனக்கு உண்மையில் உறவில்லை என்பது புரிந்தது. எனக்கு உறவு என்று யாருமில்லை, ஆனால் என்னை உறவு என்று சொல்லிக்கொள்பவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் உறவு உடல் சார்ந்தது- என்னிடமுள்ள உலகியல் பொருள்கள் சார்ந்தது. என் உறவுகள் என்பது எது? பல பிறவிகளைக் கடந்து இன்றும் பயணித்துக்கொண்டிருக்கும் இந்த ஆன்மாவைச் சார்ந்தது. இந்த உடலை விட்டால் இந்த ஆன்மா எங்கு சென்று தங்குமோ அந்த உலகைச் சார்ந்தது. அந்த உறவுகள் இங்கும் இருக்கின்றன; ஆனால் அருகில் இல்லை. ஒரு சிலர் அதைப் புரிந்துகொண்டும் தாமரையிலைத் தண்ணீராக இருக்கிறார்கள். பலருக்கு புரியவில்லை. மாயையால் மறைக்கப்பட்ட கண்களூடாகப் பார்க்கிறார்கள். எந்த பிறவியிலும் தொடரும் ஒரு உறவு இப்போது இங்கிருந்தாலும், எங்கிருக்கிறது என்றே தெரியவில்லை. மற்ற உறவுகளுள் பெரும்பாலானவற்றிற்கு இந்த உறவு பற்றிய ஞானம் இல்லை.


இது ஒரு விச்சித்திரமான வாழ்க்கை. ஒன்று மட்டும் புரிகிறது. கீழேவந்துவிட்டால், இந்த உடலை விடும் வரை வந்த இடத்தைப் பற்றிய ஞானம் இருக்கக் கூடாது. அதை உணர்த்திவிட்டார்களென்றால், பிறகு இவ்வுலக யதார்த்த வாழ்க்கை ஒரு இமாலயப் பயணம் போல் சுமையாகிவிடும். இதைத்தான் ஆங்கிலத்தில் அழகாக சொன்னார்கள் "Living between two worlds" என்று. இப்போது என் வாழ்க்கையும் அப்படித்தான் ஆகிவிட்டது. இது இரட்டை குதிரைகளில் ஒரே நேரத்தில் பயணிப்பதற்கு ஒப்பானதாகும்.

சரி; இதை நான் எப்படி கையாளுகிறேன்? எனக்கு இந்த வாழ்க்கை பிடித்திருக்கிறதா? ஆம்! இல்லை! இரண்டுமே என் பதில்கள் தான். முரண்பாடு! உண்மையான என் உறவுகளைப் பற்றிய வெளிப்பாடு, என்னை மகிழ்ச்சியடைய செய்கிறது. மெய்போலவும் பொய்யான இந்த உலக வாழ்க்கையைப் பார்க்கும் போது, பிடிக்கவில்லை. இதிலிருந்து தப்பித்து மேலே போய்விடவேண்டும் என்ற உணர்வு மேலோங்குகிறது. இதை என் விருப்பத்திற்குத் தகுந்தாற் போல் திருத்தியமைத்துக் கொள்ளும் சக்தி எனக்கிருக்கிறதா என்றால்,இல்லையென்று தான் நினைக்கிறேன். இல்லாமல் போனதற்கும் நான் தான் காரணம். என்னை முழுமையாக அவன் கமல பாதங்களில் சமர்ப்பித்துவிட்ட பிறகு எனக்கு என்ன தகுதியிருக்கிறது ஒன்றை விரும்புவதற்கும், வெறுப்பதற்கும்? அவன் விருப்பமே தன் விருப்பமாக வாழத் துணிந்தபின் கருவிக்கு என்று தனிப்பட்ட விருப்பமிருக்கலாமா?

மீண்டும் மனம் உறவுகள் பற்றி சிந்திக்கிறது. ஒரு காலத்தில் எப்படியிருந்தேன் நான்! எப்படியாகிவிட்டேன் இப்போது என்று நினைக்கிறது. ஆம்! உண்மைதான். சிறு வயதிலிருந்தே என்னைச் சுற்றியிருந்தவர்கள் பால் நான் மிகவும் ஆழ்ந்த பாசமும், நேசமும் கொண்டிருந்தேன். ஒவ்வொருவரையும் இதயத்தின் அடி ஆழத்திலிருந்து நேசித்தேன். அதை வெளிப்படுத்திக் கொண்டது சிலரிடம் மட்டும் தான். மற்றவர்கள் பார்வையில் நான் ஒரு முரடனாக, கடின மனம் கொண்டவனாக, மென்மையான உணர்வுகள் அற்றவனாக இருந்திருக்கலாம். நான் நேசமாகப் பழகிய அத்தனை பேரும் என்னிடம் பாசமாகத்தான் இருந்தார்கள்,என் மனைவி மக்கள் உட்பட. சமீப காலம் வரை அதை உண்மை என்று தான் மனம் எண்ணிக்கொண்டிருந்தது.

அப்படியானால், இந்த மாற்றம் எப்போது ஏற்பட்டது? என் மூலம் எதுவென்று எனக்கு தெரிந்த நாள் முதலா? இல்லை என்று தான் சொல்வேன். காரணம், அந்த வெளிப்பாட்டால் என் பயணத்தின் ஒரு புதிய பரிமாணத்தைத்தான் கண்டேன். அது நான் இவர்கள் பால் கொண்டிருந்த நேயத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. பின் எது என்னை இவர்களுடைய பாசத்தை, நேசத்தை பகுப்பாய்வு செய்து இது எதிர்பார்ப்பில் வாழும், பலமற்ற, காலத்தால் அழிந்து போகக்கூடிய் ஒரு மன உணர்வு என்று உணர்த்தியது? இந்த உறவுகள் ஒரு எதிர்பார்ப்பில் நிலைக்கும் பண்டமாற்று வியாபாரம் என்பதை நான் உணர ஒரு சந்தர்ப்பம் என் குருநாதனால் எனக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்ட பிறகு தான். அந்த சூழ்நிலையும் சந்தர்ப்பமும் என்ன என்று நான் விளக்கப்போவதில்லை. விளக்கினால், அது மற்றவர்களுடைய தனிப்பட்ட மன உணர்வுகளை அலசி ஆய்வு செய்யும் அநாகரிகச் செயலாகிவிடும்.

அந்த உண்மையின் வெளிப்பாட்டில் நான் அதிர்ந்து போனேன், உடைந்து போனேன், நிலைகுலைந்து விழுந்துவிட்டேன். என்ன அந்த வெளிப்பாடு? எல்லா உறவுகளும் ஒரு எதிர்பார்ப்பின் அடிப்படையில் தான் இயங்குகின்றன; தாயின் உறவையும் சேர்த்துத் தான்! உலகியல் உடமைகளுக்காகவும், மகிழ்ச்சிக்காகவும், எதிர்பார்ப்பில் இணைந்து வாழும் இந்த உறவுகளில் பலமில்லை, உறுதியில்லை. கொடுக்கும் வரை தான் இருக்கும். இல்லையென்றால் எல்லா உறவுகளும் இல்லையென்றாகிவிடும். இது தான் உண்மை. இதை நேருக்கு நேர் சந்தித்ததால் நான் நிலை தடுமாறிவிட்டேன். யாரை நான் எல்லா உலகியல் நியதிகளையும் தாண்டி தீவிரமாக நேசித்தேனோ அந்த உறவு காரணமின்றி என்னை வார்த்தை ஈட்டிகளால் துளைத்தெடுத்த போது ஆச்சரியத்திலும், அதிர்ச்சியிலும் உறைந்துவிட்டேன். அதைத் தாங்கும் சக்தியின்றி தவித்தேன். என் தந்தை, என் குருநாதன், என் நிலை அறிந்து என்னை இந்நிலையில் இருந்து மீட்டான். நான் மீண்டும் தூக்கி நிறுத்தப்பட்டேன். தாமரையிலைத் தண்ணீராக வாழத் தயாராக்கப்பட்டேன். கொடுக்க மட்டுமே தெரிந்திருந்தால் போதும் என்று புரிந்து கொண்டேன். கொடுப்பதில் சுகமிருப்பதை உணர்ந்தேன். எதிர்பார்ப்பை விட்டதால், ஏமாற்றமில்லை, இழப்பதற்கு ஏதுமில்லை, சோகமில்லை. ஆனால் மனம் காலியான பெருங்காய பெட்டகத்தில் தொடரும் வாசத்தை ஒத்த நிலையில் அந்த நினைவுகளில் இருந்து முழுவதுமாக விடுபட லேசான எதிர்ப்பைக் காட்டுகிறது. ஆனால் அது என் குருநாதன் அடிக்கடி சொல்வது போல் ஒரு ‘பிரச்சினை இல்லை’. இந்த நிலையில், உறவுகளையும் தாண்டி மனம் அமைதியில் நிலைக்கிறது. என் ஆன்மிகத் தந்தைக்கு கண்ணீர் மல்க நன்றி சொல்வதைத் தவிர வேறெதுவும் தோன்றவில்லை எனக்கு. என் பிறவிகள்தோறும் எத்தனையோ தாய்களின் உருவத்தில் என்னைப் பாதுகாத்து, அரவணைத்து, தூக்கிச் சுமக்கும், ஒரு கணமும் எனை நீங்காமல் எப்போதும் உடனிருக்கும் அன்னை பராசக்திக்கும் நன்றி!

எங்கோ அலைந்து கொண்டிருந்த மனம் விழித்துக் கொண்டு தன்னை யாரோ கவனிப்பதை உணர்ந்து என் முன் ஒரு நொடி அசையாமல் நின்றது. அந்த அசைவற்ற நொடிகளை சேகரிக்க முனைகிறேன்.

கேசவன்

1 கருத்து: