இந்த வலைப்பதிவில் தேடு

தேடலில் துவங்கி….விடியலை நோக்கி….

விடியலைத் தேடி தொடரின் நிறைவு பாகம்....

அதன் பின் சில நாட்கள் கடந்தன. ஒரு நாள் திருமதி ஷோபனா விடமிருந்து போன் கால் வந்தது. சந்தோஷ அதிர்ச்சியைத் தரும் மிக மகிழ்ச்சியான ஒரு செய்தியைச் சொன்னார்கள். திருமதி நந்தினி சத்யமூர்த்தி என்பவர், அவர் கணவர் திரு ரவி அவர்களின் சகோதரி, நம் டாக்டரை, புரசைவாக்கத்தில் 31.01.1997 மதியம் 1.45 மணி அளவில் ஹோட்டல் சரவண பவன் அருகில் நின்று கொண்டிருந்ததை மிகத் தெளிவாக, எவ்வித சந்தேகத்திற்கும் இடமின்றி, நேருக்கு நேர் பார்த்திருக்கிறார். இந்த இடத்தில் திருமதி நந்தினி பற்றி ஒரு குறிப்பு மிக அவசியமாகிறது. டாக்டர் எனச் சொல்லக்கேட்டாலே உருகிப்போகும் நம்மிடையே, திருமதி நந்தினி அவர்கள் டாக்டரிடம் அவ்வளவு ஈடுபாடில்லாதவர். மனத்தளவில் அவரை ஒரு குருவாக ஏற்றுக் கொண்டவரில்லை. அவரை,வருவார் என எதிர்பார்த்திருப்பவரும் இல்லை.

இப்படிப்பட்ட மன நிலையுள்ள ஒருவர் முன், விபத்தில் சிக்கி உயிர் இழந்துவிட்டவர், அரசுப் பொது மருத்துவ மனையில் post mortem செய்யப்பட்டு, 'இறந்து விட்டார்' எனச் சான்றிதழ் அளிக்கப்பெற்று, முறைப்படி சடங்குகளை செய்து, அடக்கம் செய்யப்பட்டவர்,(செய்தித்தாள்களில் அவர் மறைவு பற்றிய செய்திகள் வெளிவந்தன) அதே டாக்டர் தன் முன் ரத்தமும், சதையுமாக, பட்டப்பகலில் வந்து நின்றால், அவர் நிலை எப்படி இருந்திருக்கும்?! ஓரிரு வினாடிகளில் தன்னைச் சுதாரித்துக்கொண்டு, சாலையின் மறு பக்கம் நின்று கொண்டிருந்த அவரை நோக்கி விரைந்தார். சாலையைக் கடக்கும் முயற்சியில், குறுக்கே வந்த வாகனங்களால் கவனம் சற்றுச் சிதறுண்டு, ஒருவாறு அவர் நின்றிருந்த இடத்தை அடைந்த போது, அங்கே டாக்டரை காணவில்லை. கூட்டத்தில் எப்படி மறைந்தாரோ! நந்தினிக்கு இப்படி அவர் காட்சி தந்தது, முன்பு ஒரு முறை, “நான் சுதந்திரப்பறவை” என்று குறிப்பிட்ட அதே 31.01.1997 ம் நாள். நாங்கள் மேலே விவரிக்கப்பட்ட பயணத்தைத் தொடங்கிய நாள்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, அதே புரசைவாக்கத்தில், செங்கல் சூளை ரோடில், புதிதாய்க் கட்டி முடிக்கப்பட்டிருந்த தேவாலயத்தின் வாயிலில், அம்பேத்கர் சிலை அருகில் டாக்டர் நின்றிருந்ததை நந்தினி அவர்கள் மீண்டும் ஒரு முறை பார்த்திருக்கிறார்கள். இம்முறை அவர்கள் காரில் சென்று கொண்டிருந்ததால், காரை நிறுத்திவிட்டு திரும்பி வந்து பார்ப்பதற்குள் அவர் அங்கில்லை. இவரே டாக்டரை இரண்டு முறை பார்த்துவிட்டார் ஒரு மாத இடை வெளிக்குள்.

இதைத் தொடர்ந்து, ஜானகிராமனின் மகன் ஸ்ரீராம், தன் வீட்டிற்கு வரும் போது, யாரோ தன்னைப் பின்னாலிருந்து பார்ப்பது போன்ற உணர்வால் உந்தப்பட்டு, திரும்பிப் பார்த்த போது, டாக்டர் T.V.S.50 வாகனத்தில் இவரைத் தாண்டி சென்று மறைந்து விட்டாராம். பார்த்த இடம்; அண்ணா நகர், ஜானகிராமன் வீட்டருகில்.

இதற்குப் பிறகு தேடல் தீவிரப் படுத்தப்பட்டு, பல சாட்சியங்கள் கிடைத்தன. புரசைவாக்கத்திருக்கும் ‘டானா’ தெருவிலுள்ள ஒரு சிறு டீக் கடையில் டாக்டர், காலையில் பூரியும், இட்லியும் பார்சல் வாங்கிப் போனதைக் கேள்விப்பட்டு, நாங்கள் போய்க் காத்திருந்தோம். அன்றும், அதன் பிறகும் டாக்டர் அங்கு வரவில்லை. ஆனால் பால் வினியோகம் செய்யும் கடைக்காரர் ஒரு முறை பார்த்திருக்கிறார். அந்த பகுதியில் வாழும் இளைஞர்கள் சிலர் பார்த்திருக்கிறார்கள். பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் உள்ள மடத்தில் வசிக்கும் சாது ஒருவர் டாக்டரை,அந்தக்காலக் கட்டத்தில், இரண்டு மாதங்களுக்கு முன் பார்த்திருக்கிறார். புவனேஸ்வரி சினிமாவுக்கெதிரில் இருக்கும் கடையில் வேலை செய்யும் சுமார் பத்து வயது சிறுவன் ஒருவன், நாய்க் கடிக்கு வைத்தியம் பார்க்க சென்ற இடத்தில், இந்த டாக்டர் தான் தன்னை அரசாங்க மருத்துவ மனைக்குச் செல்லும்படி சொன்னதாக உறுதியாகக் கூறுகிறான். ஆனால் அவன் சொன்ன கிளினிக்கில் பார்த்த போது, அங்கே வேறொரு டாக்டர் இருந்தார். இந்த மாயவனின் விளையாட்டை யாரால் புரிந்து கொள்ள முடியும்!

ஈஸ்டர் ஹில்லை நோக்கி அன்று பயணித்ததற்குப் பிறகு, பல இரவுகள்......பல விடியல்கள். ஆனால் எங்கள் தேடல் பயணம் தொடர்கிறது........என் வாழ்வில் விடியலுக்காக இன்னும் காத்திருக்கிறேன். மேலே நீங்கள் படித்தது, நான் 1996 ல் சில, பல அனுபவங்களுக்குப் பிறகு Voice of Anandajothi இதழில் எழுதி மூன்று பகுதிகளாக வெளி வந்த தொடர்.. அதில் சில திருத்தங்களுடன் மேலே கொடுத்துள்ளேன். அத்துடன் முடிந்துவிடவில்லை எங்கள் தேடல். பயணங்கள் தொடர்ந்தன. சுமார் இரண்டாண்டு காலம் எங்கள் தேடல் பயணங்கள் தமிழகத்தின் மூலை முடுக்குகள் மட்டுமின்றி வெளி மானிலங்களிலும் தொடர்ந்தன. உள்ளும் புறமும் எங்களுக்குக் கொடுக்கப்பட்ட குறிப்புகள், வழிகாட்டுதல்களின் துணையுடன் தேடல்கள் தொடர்ந்தன. எல்லாப் பயணங்களும் எங்களைப் பொருத்தமட்டில், டாக்டரை நேருக்கு நேர் பார்க்க முடியாமலே முடிந்தன. ஆனால் பார்த்தவர்களின் சான்றுகள் மலை போல் குவிந்தன. இந்தப் பயணங்களால் எங்களுக்குக் கிடைத்த ஆன்மிக அனுபவப் பொக்கிஷங்கள் ஏராளம்............... ஏராளம். இதே பக்கத்தில் என் குருநாதனின், நிஜமாக இருப்பவரின்  நிழல் படம் இருக்கிறது. நிஜத்தை நேரில் காணும் நாளுக்காக காத்திருக்கிரேன்.

இந்தத் தொடர் தொடரும். எல்லா அன்பர்களும் 'வாய்ஸ் ஆஃப் ஆனந்த ஜோதி' யின் எல்லா இதழ்களையும் படிப்பார்கள் என்று எதிர் பார்ப்பது சாத்தியமில்லை. எனவே, மேலே உள்ள கட்டுரையை ஆரம்பமாகக் கொண்டு, தொடர்ந்து இந்த வலைத்தளத்தில் எழுதவுள்ளேன். நான் மட்டுமல்லாது, இந்த தேடல்களில் பங்கு பெற்ற மற்ற சகோதர சகோதரிகளும் எழுதுவார்கள் என எதிர் பார்க்கிறேன்.

இன்னும் வரும்.........

கேசவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக