இந்த வலைப்பதிவில் தேடு

சிறகுகளை விரியுங்கள்!



நீண்ட நாட்களாகிவிட்டன இந்த வலைத்தளத்தில் என் இடுகைகளை பதித்து. இதனினும் முக்கியமான வேலைச் சுமை இருந்ததால் இயலவில்லை. முக்கியமான வேலை என்று நான் கருதியவை முடிந்துவிட்டதும் மீண்டும் எழுதுவதற்கு ஒரு காரணம்.

சென்ற 24ம் தேதியிலிருந்து என் குரலுக்கு ஓய்வு அளித்துவிட்டேன். மௌனத்தை கடைபிடிக்கிறேன். ஓரிரு நாட்கள் சிறமமாக தோன்றினாலும், இப்போது பழகிவிட்டது. எல்லாவற்றிற்கும் பழக்கம் தான் காரணம். என்னளவில் நான் அமைதியாக இருக்கிறேன். எண்ணங்கள் இலகுவாக ஒருங்கிணைகின்றன. கடலலைகளைப் போல் ஆர்ப்பரித்த மன அலைகள் சல சலத்தோடும் அருவியின் அலைகளைப்போல் வீரியம் குறைந்து காணப்படுகிறன. நல்ல முன்னேற்றம் தான்! மௌனத்தை நான் யாருக்கும் பரிந்துறைக்கவில்லை; காரணம் அது அவ்வளவு சுலப்மில்லை என்பதை உணர்கிறேன். காட்டில், மலையில், குகையில் தவமிருக்கும் யோகியருக்கு அது எளிதில் கைக்கூடலாம். உலக வாழ்க்கையில் இணைந்திருப்பவர்க்கு இது சற்று கடினமான செயல். நம் வைராக்கியத்தை சோதனைக்குட்படுத்தும் சோதனைக்கூடம். எனவே, மௌனத்தை விடுத்து, நான் சொல்லப்புகுந்த செய்திக்கு வருகிறேன்.

சமீபத்தில் என் நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். ஆன்மிக செய்திகளை பரிமாறிக்கொண்டிருந்தோம். மிகவும் சுகமாக சென்றுகொண்டிருந்த பரிவர்த்தனை, அவருடைய சொந்த வாழ்க்கைக்கு மாறியது. உறவுகளால் அவர் அனுபவித்துவரும் துயரங்களை கொஞ்சம் பகிர்ந்துகொண்டபோது, என் மனம் வருந்தியது. அதைக் கடந்து செல்லும் வழியை சொன்னேன். ஆனால் அவர் அதை ஆய்ந்தறியும் மன நிலையில் இல்லை என்பதைப் புரிந்துகொண்டேன். வேறொருநாள் வேறு சூழ்நிலையில் பேசவேண்டும் என நினைத்தேன். அப்போது தான் தோன்றியது, சொல்லவேண்டியதை அவருக்குமட்டுமே சொல்ல வேண்டுமா? இதுபோன்ற சூழலில் சிக்கி சோர்வடைந்திருக்கும் அனைவருக்கும் ஏன் சொல்லக்கூடாது என்ற எண்ணம் தான் இந்த இடுகைக்கான மூல காரணம். பயன் யாருக்கெல்லாம் கிடைக்கவேண்டுமென்றிருக்கிறதோ அவர்களுக்கெல்லாம் போய்ச் சேரட்டுமே இறைவன் அருளால் என்று எண்ணி சொல்ல துவங்குகிறேன்.

சிறகுகள்


பறவைகளுக்கு மட்டும் இல்லை சிறகுகள். நம் ஒவ்வொருவருக்கும் இருக்கின்றன. அவற்றை விரித்துப் பாருங்கள். பிறகு வானம் வசப்படும். அது தான் உங்கள் எல்லை. உங்கள் கவலைகளெல்லாம் கண்ணுக்குப் புலப்படாமல் தரையில் தங்கிவிடும். எல்லையற்று விரிந்த வானமும், சில்லென்ற தூய காற்றும் உங்களை நிரந்தர ஆனந்தத்தில் மூழ்கடிக்கும்.

நான் சொல்வது, எழுத்தாளனின் கற்பனை போல் தோன்றுகிறதா? உண்மைதான். விண்வெளிப் பயணத்தைப் பற்றி கற்பனை செய்து கதை எழுதினார் அன்று ஒரு எழுத்தாளர். அவர் கற்பனை இன்று உண்மையானது. எல்லா கற்பனைகளும் ஒரு நாள் உண்மையாகும். நல்ல கற்பனைகள் உண்மையாக, இறைவன் துணையிருப்பான். அதைத்தான் டாக்டர் கலாமும் சொன்னார் கனவு காணுங்கள் என்று. நீங்கள் எதைப்பற்றி நினைக்கிறீர்களோ அதுவாகவே நீங்கள் மாறிவிடுவீர்கள் என்று ரிஷிகேஷ் யோகி, மஹான் சிவானந்த சரஸ்வதி எழுதியிருந்ததை அவருடைய ஒரு புத்தகத்தில் படித்தது எனக்கு இன்றும் நினைவில் உள்ளது. அவர் தான் என் முதல் குரு. அவருடைய வலிமை மிக்க, உயிரோட்டமான எழுத்துக்கள் தான் ஆரம்ப காலத்தில் என் யோகப்பாதைக்கு மிகவும் உதவியாக இருந்தவை. என் அன்பை அந்த மஹானின் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்.

உங்களுக்கும் சிறகுகள் இருக்கின்றன. பறக்கலாம் என்று சொன்னேன். பறக்கலாம். பயிற்சி வேண்டும். பயிற்சியால் எதுவும் சாத்தியமே! யோகிகளும் அதைத்தானே செய்கிறார்கள். பயிற்சியின் மூலம் இறைத்தன்மையை அடைகிறார்கள்.

உங்களை பத்மாசனத்தில் அமர்ந்து சின் முத்திரை பிடித்து யோகப் பயிற்சி செய்யச்சொல்லவில்லை. அது வேறு. நான் சொல்ல வந்தது வேறு. என் அனுபவத்தைச் சொல்கிறேன். முடிந்தால் முயன்று பாருங்கள். நீங்களும் பறக்கலாம்.

முக்கியமான வேலை வந்துவிட்டது. இதன் தொடர்ச்சிஐ என் அடுத்த இடுகையில் காணுங்கள் வெகு விரைவில்.

அன்பின் பெயரால்,

கேசவன்.